செய்திகள்

வடமதுரை, அய்யலூர் பகுதியில் சூதாட்ட கும்பல் மீண்டும் அட்டகாசம்

Published On 2019-05-15 11:24 GMT   |   Update On 2019-05-15 11:24 GMT
வடமதுரை, அய்யலூர் பகுதிகளில் சூதாட்ட கும்பல் அட்டகாசம் மீண்டும் அதிகரித்துள்ளது.

வடமதுரை:

வடமதுரை, அய்யலூர் பகுதியில் விவசாயிகளே அகதிகம் உள்ளனர். மம்மானியூர், ஆலம்பட்டி, கொம்பேறிபட்டி, கிணத்துப்பட்டி, புத்தூர், குருந்தம்பட்டி, செங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் மழை இல்லாததால் வறட்சி அதிகரித்துள்ளது.

இதனால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். கடந்த மாதம் சூதாட்ட கும்பலை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அபராதத்துடன் அவர்களை எச்சரித்து அனுப்பினர். இதனால் சூதாட்டம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது.

விவசாயிகள் கஷ்டத்தை பயன்படுத்தி தோட்டங்களை வாடகைக்கு எடுத்து சூதாடி வருகின்றனர். குறிப்பாக மலை கிராமங்களுக்கு செல்ல நீண்ட நேரம் ஆகும் என்பதால் சூதாட்ட கும்பல் இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி விளையாடி வருகின்றனர்.

மேலும் ஒருவரை தோட்டத்தின் வெளியே காவலுக்கு நிறுத்துகின்றனர். போலீசார் வந்தால் தகவல் தருகின்றார். இதனால் பெரும்பாலான சூதாட்ட கும்பல் போலீசாரிடம் சிக்குவதில்லை. விவசாயிகள், கூலித்தொழிலாளர்களுக்கு இந்த கும்பல் கடனாக பணம் தருகின்றனர். சூதாட்டத்தில் தோற்று விட்டால் சைக்கிள், பைக் உள்ளிட்ட வாகனங்களை கும்பல் அவர்களிடம் இருந்து பிடுங்கிக் கொள்கிறது.

ஏற்கனவே மதுவால் ஏராளமான குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. இந்த நிலையில் சூதாட்டமும் சேர்ந்து கொண்டதால் தங்கள் சம்பளத்தின் பெரும் பகுதியை இதற்கே செலவு செய்து விடுகின்றனர். எனவே பல குடும்பங்கள் சிரமம் அடைந்து வருகின்றன. எனவே போலீசார் இவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News