செய்திகள்

புதுக்கோட்டையில் ரூ.5 கோடி நகைகளுடன் மாயமான வங்கி உதவியாளர் பிணமாக கண்டெடுப்பு

Published On 2019-05-03 17:17 IST   |   Update On 2019-05-03 17:17:00 IST
புதுக்கோட்டையில் ரூ.5 கோடி நகைகளுடன் மாயமான பஞ்சாப் நேஷனல் வங்கி அலுவலக உதவியாளர் மாரிமுத்துவின் உடல் மணல்மேல்குடியில் கண்டெடுக்கப்பட்டது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை அருகே உள்ள திருக்கட்டளையை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் புதுக்கோட்டை தெற்கு ராஜவீதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் அலுவலக உதவியாளராக கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி ராணி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் புதுக்கோட்டை கீழ 5-ம் வீதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். மேலும் இவர் சொந்தமாக கார் வைத்து உள்ளார்.

இந்நிலையில் மாரிமுத்து கடந்த 22-ந் தேதி வீட்டில் இருந்து தனது காரில் சென்றவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை எனக்கூறி மாரிமுத்துவின் மனைவி ராணி புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரிமுத்துவிற்கு சொந்தமான கார் வல்லத்திராக்கோட்டை பகுதியில் உள்ள தைலமர காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் கிடந்தது. அந்த காரில் கவரிங் வளையல்கள் மற்றும் ஒரு ஹார்ட் டிஸ்க் கிடந்தன. இந்த சம்பவம் குறித்து வல்லத்திராக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாயமான மாரிமுத்துவின் உடல் மணல்மேல்குடியில் போலீசார் கண்டுபிடித்தனர். மாரிமுத்துவின் உடல்தான் என அவரது மனைவி ராணி அடையாளம் காட்டினார். மாயமான நகைகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News