செய்திகள்

வரத்து குறைவால் மீண்டும் உச்சத்தை எட்டும் தக்காளி விலை

Published On 2019-04-23 09:57 GMT   |   Update On 2019-04-23 09:57 GMT
வரத்து குறைவால் தக்காளி விலை மீண்டும் உச்சத்தை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு இடைய கோட்டை, அம்பிளிக்கை, முத்து நாயக்கன்பட்டி, கேதையறும்பு, கள்ளிமந்தையம் உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து தினசரி தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்படும். கடந்த சில நாட்களாக வரத்து நின்றதால் இந்த கிராமங்களில் இருந்து தக்காளி கொண்டு வரப்படவில்லை.

இதனால் மலை கிராமங்களான பால்கடை, வடகாடு, பாச்சலூர், பெத்தேல்புரம், பெரியூர் ஆகிய கிராமங்களில் இருந்தே தக்காளி கொண்டு வரப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 800 முதல் 900 பெட்டிகள் மட்டுமே வருகிறது. இது சராசரி வரத்தை விட மிகவும் குறைவு ஆகும்.

இதனால் விலையும் அதிகரித்துள்ளது. 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி ரூ.400 முதல் ரூ.420 வரை விற்பனையானது.

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து தினசரி மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை, தூத்துக்குடி என பல்வேறு ஊர்களுக்கு தக்காளி அனுப்பி வைக்கப்படும். ஆனால் வரத்து குறைவு காரணமாக அப்பகுதி வியாபாரிகள் பெங்களூர், மதனபள்ளி, உடுமலைப்பேட்டை, பழனி, சிந்தாமணி போன்ற பல்வேறு ஊர்களுக்கு சென்று தக்காளி வாங்கிச் செல்கின்றனர்.

சிந்தாமணியில் ஒரு பெட்டி ரூ.300 முதல் ரூ.400 வரையிலும், பழனியில் ஒரு பெட்டி ரூ.300 முதல் ரூ.350 வரையிலும், உடுமலைப்பேட்டையில் ஒரு பெட்டி ரூ.350 முதல் ரூ.410 வரையிலும் கொள்முதல் செய்யப்படுகிறது. மார்க்கெட்டில் தக்காளி வரத்து குறைந்துள்ள நிலையில் விலை உயர்வு அடைந்துள்ளதால் மலை கிராம விவசாயிகள் ஆறுதல் அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News