செய்திகள்

மார்த்தாண்டம் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 15 வாகனங்கள் பறிமுதல்

Published On 2019-03-30 11:47 GMT   |   Update On 2019-03-30 11:47 GMT
மார்த்தாண்டம் பகுதியில் அதிக பாரம் ஏற்றி வந்த மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 15 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் அதிகளவு லோடு ஏற்றிக் கொண்டு லாரிகள் செல்வதால் விபத்துக்கள் ஏற்படுகிறது.

மேலும் அதிகளவு பாரம் ஏற்றி செல்வதனால் ரோடுகளும் சேதமடைந்து வாகனங்களில் செல்வோர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்கள் கேரளாவிற்கு கனிமங்களை கடத்திச் செல்வதாகவும், வாகனங்களுக்கு சான்றிதழ் முடிந்த பின்பும் வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கும் புகார்கள் வந்தன.

இதையடுத்து நேற்று மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் கனகவல்லி மற்றும் அதிகாரிகள் களியக்காவிளை, மார்த்தாண்டம், புதுக்கடை உள்பட பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கேரள பதிவு எண் கொண்ட 2 ஆம்னி பஸ்கள் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்டதாக அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் 2 ஆம்னி பஸ்களுக்கும் தலா ரூ.32 ஆயிரம் அபராதத் தொகையாக விதித்தனர்.

இதேபோன்று அந்த வழியாக 8 லாரிகள் அதிக பாரம் ஏற்றி வந்ததாக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் உரிய தகுதி சான்றிதழ் இல்லாமல் இயக்கப்பட்டதாக 3 லாரிகளும், தடம்மாறி இயக்கப்பட்ட ஒரு மினி பஸ், அரசு பஸ்சுக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில் பயணிகளை ஏற்றி டிக்கெட் வசூலில் ஈடுபட்ட 2 வேன்களையும் பறிமுதல் செய்தனர்.

நேற்று நடந்த வாகன சோதனையில் 15 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றிற்கு அபராதமும் விதிக்கப்பட்டது. தொடர்ந்து ஆவணங்கள் இன்றி இயங்கும் வாகனங்கள் கண்காணிப்பில் அவற்றை பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews
Tags:    

Similar News