செய்திகள்

சென்னை குடும்ப நல கோர்ட்டில் நீதிபதி முன்பு மனைவியை கத்தியால் குத்திய கணவன்

Published On 2019-03-19 08:50 GMT   |   Update On 2019-03-19 08:50 GMT
சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணையின்போது, நீதிபதி கண் எதிரே மனைவியை கணவன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #HusbandStabbedWife

சென்னை:

சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் குடும்ப நல கோர்ட்டு செயல்பட்டு வருகிறது.

இங்கு ஏராளமான விவாகரத்து வழக்குகள் விசாரிக்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் குடும்ப நல கோர்ட்டுக்கு சரவணன்- வரலட்சுமி என்ற தம்பதி வந்திருந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையேயான விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. கோர்ட்டில் நீதிபதி கலைவாணன் அமர்ந்து இருந்தார்.

வழக்கு விசாரணையின்போது இருவரும் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது சரவணன் திடீரென மனைவி வரலட்சுமியை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

நீதிபதி முன்னிலையிலேயே நடைபெற்ற இந்த சம்பவம் கோர்ட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள்.

கோர்ட்டு அறை என்று பாராமல் மனைவியை நீதிபதி முன்பே கத்தியால் குத்திய சம்பவம் ஐகோர்ட்டு வளாகம் முழுவதும் பீதியை ஏற்படுத்தியது.

உடனடியாக போலீசார் கோர்ட்டு அறைக்கு சென்று காயம் அடைந்த வரலட்சுமியை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கணவர் சரவணன் கைது செய்யப்பட்டார்.

ஐகோர்ட்டில் பலத்த பாதுகாப்பையும் மீறி சரவணன் கத்தியை எடுத்து வந்தது எப்படி என்பது பற்றி விசாரணை நடை பெற்று வருகிறது. இதில் கவனக் குறைவாக செயல்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. #HusbandStabbedWife

Tags:    

Similar News