செய்திகள்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசுக்கு 4 நாள் போலீஸ் காவல் - கோர்ட் அனுமதி
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசை 4 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க சிபிசிஐடிக்கு கோவை நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது. #PollachiAbuseCase #PollachiCase
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி மாணவிகள், இளம்பெண்களை மிரட்டி ஆபாசமாக வீடியோ எடுத்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாலியல் வழக்கு தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த நிதிநிறுவன அதிபர் திருநாவுக்கரசு, அவரது நண்பர்கள் சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது.
இதற்கிடையே, இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. ஐ.ஜி.ஸ்ரீதர், பெண் போலீஸ் சூப்பிரண்டு நிஷா மற்றும் போலீசார் பொள்ளாச்சிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
இந்த விவகாரத்தில் அரசியல் பின்னணி இருப்பதாகவும், இதன் காரணமாக ஒருவரை காப்பாற்ற முயற்சி நடப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை அடுத்து போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுமாறு பரிந்துரை செய்தார். இதுதொடர்பான அரசாணையை தமிழக அரசு நேற்றுமுன்தினம் மாலை பிறப்பித்தது. இதனையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு விசாரணையை விரைவில் தொடங்க உள்ளனர்.
இந்நிலையில், கைதான திருநாவுக்கரசு உள்பட 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர். இதற்காக இன்று கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனு இன்று மதியம் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், திருநாவுக்கரசை 4 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. #PollachiAbuseCase #PollachiCase