தேனி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மறுத்த டாக்டர்கள்
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே பிராதிகாரன்பட்டியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது33). டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 9 மாத குழந்தை தர்ஷன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது தவறி விழுந்துள்ளான். இதில் வாயில் காயம் ஏற்பட்டதால் குழந்தையை தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் ஆஸ்பத்திரி வார்டில் குழந்தை அனுமதிக்கப்பட்டது.
ஆனால் சிகிச்சை அளிக்கவில்லை. இதுகுறித்து உதயகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களிடம் எடுத்து கூறி உள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உதயகுமார் குடும்பத்தினரை வெளியேற்றி உள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், நீண்ட நேரமாக குழந்தைக்கு சிகிச்சை அளிக்காதது குறித்து புகார் அளித்தபோது டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் சிகிச்சை அளிக்காமல் கட்டாயப்படுத்தி எங்களை வெளியேற்றி விட்டனர் என்றனர்.
இது குறித்து க.விலக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர். #tamilnews