செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில் 24,792 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதினர்

Published On 2019-03-01 15:43 IST   |   Update On 2019-03-01 15:43:00 IST
ஈரோடு மாவட்டத்தில் 216 பள்ளிக்கூடங்களில் படிக்கும் 13 ஆயிரத்து 36 மாணவிகள் ,11 ஆயிரத்து 736 மாணவர்கள் என மொத்தம் 24 ஆயிரத்து 792 மாணவ-மாணவிகள் இன்று பிளஸ்-2 தேர்வு எழுதினர். #PublicExam
ஈரோடு:

தமிழகம் முழுவதும் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கின. ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தது.

ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி தலைமையில் மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் 216 பள்ளிக்கூடங்களில் படிக்கும் 13 ஆயிரத்து 36 மாணவிகள் ,11 ஆயிரத்து 736 மாணவர்கள் என மொத்தம் 24 ஆயிரத்து 792 மாணவ-மாணவிகள் இன்று பிளஸ்-2 தேர்வு எழுதினர். இதற்காக 91 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

தேர்வு மையங்களில் காற்றோட்டமான அறைகள் தடையின்றி மின்சாரம் வினியோகம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வையொட்டி மாணவ- மாணவிகள் அருகில் உள்ள கோவில்கள் சென்று பயபக்தியுடன் வழிபட்டனர். மேலும் சில மாணவர்கள் தேர்வு எழுதும் முன் தனது ஆசிரியர்களிடம் ஆசி பெற்றனர். பல மாணவ- மாணவிகள் பள்ளி வளாகத்தில் உட்கார்ந்து படித்த பாடத்தை மீண்டும் ஒரு முறை படித்துக் கொண்டிருந்தனர்.

பிளஸ்-2 தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12.45 மணிக்கு முடிந்தது. முதல் 15 நிமிடம் அதாவது 10 மணிமுதல் 10. 15 வரை மாணவ மாணவிகள் கேள்வித்தாளை வாசிக்கும் நேரமாக ஒதுக்கப்பட்டு இருந்தது பின்னர் 10.15 மணி அளவுக்கு ஒரு மணி அடித்தது. அதன்பின்னர் மாணவர்கள் தேர்வு எழுதத் தொடங்கினர்.

ஈரோடு பன்னீர் செல்வம் பார்க்கில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த பிளஸ்-2 பொது தேர்வை மாவட்ட கலெக்டர் கதிரவன் பார்வையிட்டார்.

இன்று தொடங்கும் பிளஸ்-2 பொதுத் தேர்வு வரும் மாதம் 19ம் தேதி நிறைவடைகிறது. தேர்வுகளில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வை மாணவ மாணவிகள் முதல் முறையாக 600 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. #PublicExam

Similar News