செய்திகள்
தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது
தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 2 பேரை நாகரசம்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் அருகே உள்ள வேலம்பட்டி பச்சையம்மன் கோவில் முன்பு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக நாகரசம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ரோந்தில் ஈடுபட்ட நாகரசம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராசன் மற்றும் போலீசார் வேலம்பட்டியில் இருந்து சந்தூர் நோக்கி செல்லும்போது வேலம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பச்சையம்மன் கோவில் முன்பு இருந்த இருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சித்தனர்.
பின்னர் அவர்களை விரட்டி பிடித்த போலீசார் அவர்களை விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததாக தெரிகிறது. அவர்களை நாகரசம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் அவர்களில் ஒருவர் தர்மபுரி மாவட்டம் கோட்டைகோவில் தெருவை சேர்ந்த சாகுல் (வயது 34) மற்றும் காவேரிப்பட்டிணம் அடுத்த சவுட்டஹள்ளி கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (30) ஆகியோர் என்பது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் இவர்கள் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ராஜாகுயில் என்ற பெயர் கொண்ட 8 லாட்டரி சீட்டுகள் மற்றும் 400 ரூபாய் பணம் பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.