கொடைக்கானல் மலையில் பற்றி எரியும் தீ
கொடைக்கானல்:
கொடைக்கானலில் தற்போது பனியின் தாக்கம் முற்றிலும் குறைந்து வெயில் அதிகரித்து வருகிறது. பகல் நேரத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பம் நிலவி வருவதால் வனப்பகுதியில் வறட்சி அதிகரித்துள்ளது.
இதனால் வன விலங்குகள் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து விடுகின்றன. மேலும் வெயில் அதிகரித்துள்ளதால் குடியிருப்பு பகுதிகளிலும் அவ்வப்போது தீ பற்றி வருகிறது.
வனப்பகுதியில் உள்ள புற்கள், இலை, சருகுகள் மற்றும் மரங்கள் காய்ந்து உள்ளன. வெள்ளி நீர்வீழ்ச்சி, டைகர்சோலை, பெருமாள்மலை, அட்டக்கடி, வடகவுஞ்சி, சீனிவாசபுரம், குறிஞ்சிஆண்டவர் கோவில் சாலை, அட்டுவம்பட்டி உள்ளிட்ட இடங்களில் காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது.
இதில் பைன் , மலைவேம்பு உள்ளிட்ட அரியவகை மரங்களும் மூலிகை செடிகளும் தீயில் எரிந்து நாசமானது. வன விலங்குகளும் இடம் பெயர்ந்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தீயணைப்புதுறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இருந்தபோதும் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.