செய்திகள்

திருச்சிற்றம்பலம் அருகே வேன் மோதி ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் பலி

Published On 2019-02-19 10:19 GMT   |   Update On 2019-02-19 10:19 GMT
திருச்சிற்றம்பலம் அருகே வேன் மோதி ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் பலியாகினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சிற்றம்பலம்:

திருவாரூர் மாவட்டம், வடுவூரைச் சேர்ந்தவர் சத்தியராஜ், (வயது 35). ஆட்டோ டிரைவர். இவர் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஆவணம் கைகாட்டியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

நேற்று மாலை சத்தியராஜ் ஆட்டோவில் புதுக்கோட்டை மாவட்டம், காசிம்புதுப்பேட்டையைச் சேர்ந்த அப்துல்மஜீது மனைவி பாத்திமா பீவி (70), அவரது மருமகள் மெகரூன்னிஷாபேகம் (37). ஆகியோர் மருத்துவ பரிசோதனைக்காக பட்டுக்கோட்டைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அவர்கள் திருச்சிற்றம்பலம்-பட்டுக்கோட்டை சாலையில் உள்ள குறிச்சி பூங்கா புனல்வாசல் பிரிவு சாலை அருகே வந்தபோது அந்த வழியாக வந்த ஒரு வேன், ஆட்டோ மீது மோதியது. இதில் சத்தியராஜ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த மெகருன்னிஷா பேகம் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

பாத்திமா பீவி உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவரும் இறந்தார்.

இந்த விபத்து குறித்து திருச்சிற்றம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேதவல்லி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் செந்தில்குமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News