செய்திகள்

மயிலம் அருகே மரத்தில் கார் மோதி டிரைவர் உள்பட 3 பேர் பலி

Published On 2019-02-07 12:04 GMT   |   Update On 2019-02-07 12:04 GMT
மயிலம் அருகே வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றபோது மரத்தில் கார் மோதி டிரைவர் உள்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மயிலம்:

திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி பிரான்சிஸ்ராஜம் (வயது 58). இவர்களது மகன் செல்லதுரை. இவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார்கள். செல்லதுரையின் மனைவி ஷெர்லிக்கு வருகிற 10-ந்தேதி சென்னையில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரான்சிஸ்ராஜம் தனது உறவினர்களுடன் சென்னை செல்ல முடிவு செய்தார்.

அதன்படி நேற்று காலை பிரான்சிஸ்ராஜம் தனது பேத்தி தாட்னி(2½), உறவினர்கள் மோசஸ்(82), சகாயமேரி(77) மற்றும் நண்பர் ரவிச்சந்திரன்(55) ஆகியோருடன் ஒரு காரில் சென்னைக்கு புறப்பட்டனர். காரை திருச்சியை சேர்ந்த மாரிமுத்து(38) என்பவர் ஓட்டினார்.

இந்த கார் மயிலம் அடுத்த தென்பசார் என்ற இடத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம் சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. கார் இடிபாட்டில் சிக்கிய டிரைவர் மாரிமுத்து உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பிரான்சிஸ்ராஜம் உள்ளிட்ட 5 பேரும் பலத்த காயமடைந்தனர்.

விபத்துகுறித்து தகவல் அறிந்த மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்சுதர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பிரான்சிஸ்ராஜம், மோசஸ் ஆகிய 2 பேரும் நேற்று இரவு பரிதாபமாக இறந்தனர்.

சிறுமி தாட்னி, சகாயமேரி, ரவிச்சந்திரன் ஆகிய 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News