போராட்டத்தில் ஈடுபட்ட 3 ஆயிரம் ஆசிரியர்கள் பணி இடமாற்றம் - அரசு திரும்ப பெற கோரிக்கை
சென்னை:
ஜாக்டோ - ஜியோ அமைப்பின் கீழ் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 1500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 29-ந் தேதி இரவு காலக்கெடுவுக்கு பின்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பணி இடமாறுதல் அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 3 ஆயிரம் ஆசிரியர்கள் பணி இடம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
மாணவர்களின் நலன் கருதியும், அரசின் கோரிக்கையை ஏற்றும்தான் நாங்கள் பணிக்கு திரும்பினோம். ஆனால் பழிவாங்கும் நோக்கத்துடன் ஆசிரியர்கள் மீது தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
மாநிலம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் பணி இடம் மாற்றப்பட்டுள்ளனர். புதுக்கோட்டையில் மட்டும் 600 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தவிர்த்து தங்களுக்கு வேண்டாதவர்கள் மீது முதன்மை கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இடமாறுதல் வழங்கப்பட்ட பிறகும் சிலர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணியில் சேரவிடாமல் அலைக்கழிக்கவும் செய்கின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களில் 59 சதவீதம் பேர் ஆசிரியர்கள், இதனால் அவர்கள் மிகுந்த மனஉளைச்சலில் உள்ளனர்.
எனவே ஆசிரியர்கள் மீதான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #JactoGeo #teachers