செய்திகள்

வில்லியனூரில் வேலை கிடைக்காத விரக்தியில் எம்.டெக். பட்டதாரி தற்கொலை

Published On 2019-01-31 13:11 GMT   |   Update On 2019-01-31 13:11 GMT
வில்லியனூரில் வேலை கிடைக்காத விரக்தியில் எம்.டெக். பட்டதாரி வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி:

வில்லியனூர் ஜி.என். பாளையம் எழில்நகரை சேர்ந்தவர் தமிழரசன். தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி காமாட்சி. இவர்களது மகன் கோபிநாத் (வயது23). புதுவை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் எம்.டெக். முடித்து தங்கப்பதக்கம் பெற்றவர்.

இவர் கடந்த சில மாதங்களாக வேலைதேடி வந்தார். ஆனால் படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் விரக்தியில் இருந்து வந்தார். பெற்றோர் சமாதானப்படுத்தியும் கோபிநாத் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று தமிழரசன் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். மதியம் காமாட்சி வீட்டில் இருந்து வெளியே சென்றார். அப்போது கோபிநாத் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டி கொண்டு மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார்.

வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய காமாட்சி வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் சந்தேகம் அடைந்து ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது கோபிநாத் தூக்கில் தொங்குவதை கண்டு அலறினார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கோபிநாத் இறந்து போனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலைய்யன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் தணிகாசலம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News