செய்திகள்

குன்னூர் அருகே சுற்றுலா கார் மரத்தில் மோதி விபத்து- 6 பேர் படுகாயத்துடன் மீட்பு

Published On 2019-01-16 14:37 GMT   |   Update On 2019-01-16 14:37 GMT
குன்னூர் அருகே சுற்றுலா கார் மரத்தில் மோதிய விபத்தில் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கோவை:

மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் அமர்நாத் கோஸ் (வயது 39). இவரது மனைவி பரோலில் கோஸ் (25). இவர்களது மகன் மோதிஸ் (3).

இவர்கள் குடும்பத்துடன் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா செல்வது என முடிவு செய்தனர். இதற்காக அங்குகிருந்து புறப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு வந்தனர். அங்கு தனது நண்பரான கொலாய் கோலி (36) என்பவரது வீட்டில் தங்கினர்.

பின்னர் அனைவரும் ஊட்டிக்கு சுற்றுலா புறப்பட்டனர். இதற்காக சென்னையில் இருந்து மேட்டுப்பாளையம் வந்த நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறினர்.

ரெயில் இன்று காலை மேட்டுப்பாளையம் வந்ததும் ஒரு வாடகை காரில் ஊட்டிக்கு சென்றனர். காரை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சபீக் (22) என்பவர் ஓட்டிச் சென்றார்.

கார் மரப்பாலம் அருகே 13-வது கொண்டடை ஊசி வளைவில் திரும்ப முயன்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த மரத்தில் மோதியது.

இதில் காரில் சுற்றுலா வந்த அமர்நாத் கோஸ், அவரது மனைவி பரோலில் கோஸ், மகன் மோதிஸ், சென்னையை சேர்ந்த கொலாய் கோலி, இவரது மனைவி தீபிகா (27), டிரைவர் சபீக் ஆகியோர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் விபத்தில் படுகாயம் அடைந்த 6 பேரையும் மீட்டு குன்னூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இது குறித்து வெலிங்கடன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News