செய்திகள்
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை பெறுவதற்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள், பிளஸ்-2 மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது கல்வித்தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவடைந்து தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும்.
கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந் தேதி அன்று ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் 45 வயதிற்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் கல்வி பயிலுபவராக இருத்தல் கூடாது. ஆனால், தொலைதூர கல்வி பயிலுபவராக இருக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்திற்குரிய விண்ணப்பத்தினை அலுவலக வேலை நாட்களில் முற்பகலில் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையுடன் நேரில் வந்து பெற்று கொள்ளலாம். மேலும் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அடுத்த மாதம் பிப்ரவரி 28-ந் தேதிக்குள் அனைத்து அசல் கல்வி சான்றுகள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடனும், நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.