செய்திகள்

இண்டூர் அருகே இளம்பெண் மர்ம மரணம்- உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

Published On 2018-12-29 15:15 GMT   |   Update On 2018-12-29 15:15 GMT
இண்டூர் அருகே வீட்டில் இளம்பெண் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது சாவில் மர்மம் உள்ளதாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.
இண்டூர்:

தருமபுரி மாவட்டம், இண்டூரை அடுத்துள்ள மூக்கனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 28). இவர் ஜே.சி.பி. டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி செந்தாமரை (21). இவர்களுக்கு 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி ஆண் குழந்தை உள்ளது. 

வீட்டில் செந்தாமரை தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கணவன் வீட்டார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. செந்தாமரை உடலை இண்டூர் போலீசார் கைப்பற்றி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு இன்று காலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் செந்தாமரையின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டனர். அவரது சாவில் மர்மம் உள்ளது என்று கூறி ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். 

சாலை மறியல் செய்ய முயன்றனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பிறகு நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து சமாதானம் அடைந்த அவர்கள் செந்தாமரை உடலை வாங்கி சென்றனர்.
Tags:    

Similar News