செய்திகள்

சாப்பாடு பரிமாறாததால் மனைவியை அடித்து கொன்ற கணவன்

Published On 2018-12-16 17:35 IST   |   Update On 2018-12-16 17:35:00 IST
திண்டுக்கல் அருகே சாப்பாடு பரிமாறாததால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியை அடித்துக் கொன்றார்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே பொன்மாந்துறை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் இன்னாசி (வயது 64). இவரது மனைவி எலிசி (62). இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். மகன் துபாயில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மருமகளுக்கு வளைகாப்பு முடித்து தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

நேற்று இரவு இன்னாசி சாப்பிட வந்துள்ளார். அப்போது எலிசி அவருக்கு தண்ணீர் மற்றும் சாப்பாடு வைத்துள்ளார். காய்கறி, குழம்பு இல்லாததால் இன்னாசி எலிசியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த இன்னாசி அருகில் இருந்த பருப்பு கடையும் மத்தால் எலிசியின் தலையில் கடுமையாக தாக்கினார். வலியால் அலறி துடித்த எலிசி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து எலிசியின் உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இன்னாசியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சாப்பாடு பிரச்சினையில் கணவன் மனைவியை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News