செய்திகள்

பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 3 வயது குழந்தை பலி

Published On 2018-12-11 12:22 GMT   |   Update On 2018-12-11 12:22 GMT
ஆரணி அருகே பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 3 வயது குழந்தை பலியான சம்பவம் குறித்து டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:

ஆரணி அடுத்த சிறுமூர் வடக்கு கொட்டாமேடு பகுதியை சேர்ந்தவர் அருள்மணி விவசாயி. இவரது மனைவி கனகா இவர்களுக்கு பவஸ்ரீ (வயது6), தாரகேஸ்வரன் (3).என்ற மகள் மகன் உள்ளனர்.

பவஸ்ரீ ஆரணியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகின்றார். பள்ளியில் இருந்து தினமும் வீட்டிற்கு வேன் வந்து பவஸ்ரீயை அழைத்து செல்வது வழக்கம். இன்று காலை பள்ளிவேன் மாணவி வீட்டிற்கு வந்து நின்றது. கனகா தனது மகள் பவஸ்ரீயை வேனில் ஏற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது வீட்டிலிருந்த 3 வயது குழந்தை தாரகேஸ்வரன் வீட்டைவிட்டு வெளியே வந்து வேனின் முன்பக்க சக்கரத்தின் அருகே விளையாடி கொண்டிருந்தான். இதனை கவனிக்காத வேன் டிரைவர் வேனை இயக்கினார். அப்போது குழந்தை வேன் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தது.

அவனது அலறல் சத்தம் கேட்ட உறவினர்கள் குழந்தையை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது.

இது குறித்து தகவலறிந்த ஆரணி தாலுகா போலீசார் வேன் டிரைவர் விஜயகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News