செய்திகள்

பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்- தி.மு.க. பிரமுகர்கள் 2 பேர் பலி

Published On 2018-12-10 17:01 GMT   |   Update On 2018-12-10 17:01 GMT
பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தி.மு.க. பிரமுகர்கள் 2 பேர் பலியானார்கள்.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பேர்பெரியான்குப்பத்தை சேர்ந்தவர் ஞானமணி(வயது 54). இவர் தி.மு.க.வில் விவசாய அணி மாவட்ட அமைப்பாளராக இருந்து வந்தார். இவருடைய மனைவி பரிமளா(48). இவர்களுக்கு ரஞ்சிதா(22) என்கிற மகளும், ரஞ்சித்குமார், பிரவீன்குமார் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். பரிமளா அந்த பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இதேபோல் எலவத்தடி கிராமத்தை சேர்ந்த தி.மு.க. மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம்(47). இவரது மனைவி ஜானகி(42), மகள் ரம்யா(22), மகன்கள் அஜித்குமார்(20), அரவிந்த்(15) ஆவார்கள்.

ஞானமணி, ராமலிங்கம் ஆகியோர் நண்பர்கள் ஆவார்கள். நேற்று மாலை 6 மணிக்கு சத்திரம் கூட்டுரோட்டில் இருந்து பேர்பெரியான்குப்பத்திற்கு 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றனர். வேகாக்கொல்லை என்கிற இடத்தில் சென்ற போது, எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயடைந்த ஞானமணி, ராமலிங்கம் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இதுபற்றி தகவல் அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், காடாம்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். பின்னர் அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 2 பேரின் உடல்களையும் பார்த்து அவர்களது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

இதற்கிடையே விபத்து பற்றி அறிந்த சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் 2 பேரின் குடும்பத்தினருக்கும் அவர் ஆறுதல் கூறினார். விபத்து குறித்து காடாம்புலியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். 
Tags:    

Similar News