செய்திகள்

கோவிந்தசாலையில் முதியவர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2018-12-07 11:37 GMT   |   Update On 2018-12-07 11:37 GMT
கோவிந்தசாலையில் உடல்நிலை பாதிப்படைந்த முதியவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி:

புதுவை கோவிந்தசாலை சின்னசந்து பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது60). இவருக்கு புஷ்பா என்ற மனைவியும் 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். வயது முதிர்ச்சி காரணமாக முருகன் வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் புஷ்பா வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார்.

இதற்கிடையே முருகனுக்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்பு இருந்து வந்தது. அவரை குடும்பத்தினர் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைபெற அழைக்கும் போதேல்லாம் ஊசி போட்டுக்கொள்ள பயந்து முருகன் ஆஸ்பத்திரிக்கு செல்ல மறுப்பு தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை வீட்டுவேலை செய்ய புஷ்பா சென்று விட்டார். மகள்களும், மகனும் வெளியே சென்றிருந்த நிலையில் உடல்நலக்குறைவால் அவதி அடைந்து வந்த முருகன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டின் மாடியில் கேபிள் வயரால் தூக்குபோட்டு தொங்கினார்.

வேலைமுடிந்து வீட்டுக்கு வந்த புஷ்பா மாடியில் சென்று பார்த்த போது கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து கணவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே முருகன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் பெரியக்கடை உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News