செய்திகள்
தொழில் அதிபரை மீட்க கடத்தல்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு
ராசிபுரம் அருகே ஈரோடு தொழில் அதிபரை கடத்தி சென்ற கடத்தல்காரர்களை போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். #Policeshot
ராசிபுரம்:
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தொழில் அதிபர் சக்திவேல் என்பவரை நேற்று காலை மர்ம கும்பல் ஒன்று காரில் கடத்தி சென்றது. பின்னர் அவரது குடும்பத்தினருக்கு போன் செய்து சக்திவேலை விடுவிக்க வேண்டுமென்றால் ரூ.10 லட்சம் தர வேண்டும் எனக்கூறினர்.
அப்போது அவரது குடும்பத்தினர் ரூ.5 லட்சம் தருவதாக தெரிவித்தனர். இதையடுத்து அந்த பணத்தை சேலம்-கோவை பைபாஸ் சாலையில் தனியார் கல்லூரி அருகே வந்து தருமாறு அந்த கும்பல் கூறியது. இதுபற்றி சக்திவேல் குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் ரூ.5 லட்சத்துடன் அவர்கள் கூறிய இடத்துக்கு சென்றனர். போலீசார் அந்த பகுதியில் பதுங்கி இருந்தனர். மாலை 6.30 மணி அளவில் அந்த இடத்துக்கு அந்த கும்பலிடம் சக்திவேலின் உறவினர் ஒருவர் பணத்தை எடுத்து சென்றார்.
போலீசார் பதுங்கி இருந்ததை பார்த்ததும் அந்த கும்பல் காரை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றது. போலீசாரும் பின்தொடர்ந்து விரட்டிச்சென்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த அலவாய்பட்டி பகுதியில் ஊருக்குள் சென்றபோது எதிரே வந்த கார் மீது கடத்தல் கும்பல் வந்த கார் மோதி நின்றது. ஒரு காரில் சென்ற போலீசார் அவர்களின் பின்னால் சென்றனர்.
காரில் இருந்து இறங்கிய 4 பேர் கொண்ட கும்பல் போலீசார் மீது கல்வீசி தாக்கினர். இதனால் போலீசார் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களில் 2 பேர் அங்கிருந்து காட்டு பகுதிக்குள் தப்பி ஓடினர். 2 பேர் காரை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றனர். அவர்களை பிடிக்க மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். #Policeshot