செய்திகள்

தலையில் அம்மிக்கல்லை போட்டு கள்ளக்காதலியை கொடூரமாக கொன்ற கட்டிட தொழிலாளி

Published On 2018-11-14 12:08 GMT   |   Update On 2018-11-14 12:08 GMT
திருச்சி அருகே கள்ளக்காதலியை கட்டிட தொழிலாளி அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி:

திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள சுண்ணாம்புக்காரன்பட்டி பகுதியை சேர்ந்த ரெங்கராஜ் மகன் நடராஜ் (வயது 31). கட்டிட தொழிலாளியான இவர் குளித்தலை அருகே உள்ள தோகைமலை அழகனாம்பட்டி பகுதியில் அடிக்கடி பணிக்கு செல்வது வழக்கம். அப்போது அங்கு பணிக்கு வந்த அப்பகுதியை சேர்ந்த லீலா (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

லீலாவின் கணவர் சோலைராஜ் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். 10 வயதில் ஒரு மகன் உள்ளார். கணவர் இறந்து விட்டதால் ஆதரவற்று இருந்த லீலா கட்டிட பணிக்கு சென்று தனது மகனை வளர்த்து வந்தார். நடராஜூடனான பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். உல்லாசமும் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் லீலா வேறு நபர்களுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நடராஜ் லீலாவை கண்டித்துள்ளார். நேற்று லீலாவை, நடராஜ், சுண்ணாம்புகாரன்பட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து வந்தார். அப்போது அங்கு செல்போனில் பேசுவது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த நடராஜ், வீட்டில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து லீலாவின் தலையில் போட்டார். இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். வீட்டில் யாரும் இல்லாததால் நேற்றிரவு முதல் இன்று காலை வரை பிணத்தின் அருகிலேயே நடராஜ் அமர்ந்து என்ன செய்வதென்று தெரியாமல் இருந்துள்ளார்.

இன்று காலை அவரது தாய் வீட்டிற்கு வந்து பார்த்த போது, லீலா கொலை செய்யப்பட்டு கிடப்பதையும், மகன் அருகில் அமர்ந்திருப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதைத்தொடர்ந்து நடராஜ் சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் ஜீயபுரம் டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன், சோமரம்பேட்டை இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலியை கட்டிட தொழிலாளி கொலை செய்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
Tags:    

Similar News