செய்திகள்
பிரபு - கலைச்செல்வன்

தினகரன் அணியில் இருந்து விலகமாட்டோம் - அதிமுக எம்எல்ஏக்கள் அறிவிப்பு

Published On 2018-10-28 09:01 GMT   |   Update On 2018-10-28 09:01 GMT
தினகரன் அணியில் இருந்து விலகமாட்டோம், நோட்டீசை சட்ட ரீதியாக சந்திப்போம் என்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான பிரபு, கலைச்செல்வன் கூறி உள்ளனர். #TTVDhinakaran #ADMKMLAs
கள்ளக்குறிச்சி:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து கவர்னரிடம் மனு கொடுத்த 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்தது சரி தான் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

இதையடுத்து டி.டி.வி. தினகரனை ஆதரித்த 18 எம்.எல்.ஏ.க்களும் பதவி இழந்துள்ளனர்.

இந்த நிலையில் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலைச்செல்வன் (விருத்தாசலம்), பிரபு (கள்ளக்குறிச்சி), ரத்தினசபாபதி (அறந்தாங்கி) ஆகியோர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். தினகரன் தொடங்கிய புதிய கட்சியான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க அ.தி.மு.க. மேலிடம் முடிவெடுத்துள்ளது.

அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப சபாநாயகருக்கு கொறடா பரிந்துரை செய்துள்ளார். விரைவில் அவர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட உள்ளது.



இருப்பினும் 3 பேரும் தினகரன் அணியில் இருந்து விலக மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினால் அதனை சட்ட ரீதியாக சந்திப்போம் என்று 3 எம்.எல்.ஏ.க்களும் அறிவித்துள்ளனர். #Dhinakaran

இது தொடர்பாக பிரபு எம்.எல்.ஏ. கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டனாக இருந்தேன். எனக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பதவி வழங்கி உள்ளனர்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பொதுச் செயலாளர் சசிகலா ஆகியோருக்கு உண்மையானவராக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் செயல்பட்டு வருகிறார்.

தொண்டர்களை அவர் அரவணைத்து செல்கிறார். அவரது செயல்பாடு எனக்கு பிடிக்கிறது. எனவே அவரை விட்டு நான் வரமாட்டேன். யார் அழைப்பு விடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட் டேன். தினகரன் வழிகாட்டுதல் படியே நடப்பேன். தினகரனை தொடர்ந்து ஆதரிப்பேன். அதில் எந்த மாற்றமும் இல்லை.

சபாநாயகரிடம் இருந்து எனக்கு நோட்டீசு வரவில்லை. நோட்டீசு வந்த பிறகு விளக்கமாக பதில் அளிக்கிறேன். என் மீது எந்த நடவடிக்கை மேற்கொண்டாலும் அதை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.

கள்ளக்குறிச்சி தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றும்படி முதல்-அமைச்சரிடம் பலமுறை மனு கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். அந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. மாவட்ட செயலாளர் குமரகுருவிடமும் தொகுதிக்கு திட்டங்களை நிறைவேற்றும்படி கூறினேன். அவரும் கண்டு கொள்ளவில்லை. எனவேதான் நான் தினகரன் அணிக்கு சென்றேன்.

தமிழகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஆட்சி வந்தால்தான் நல்லது நடைபெறும். தொகுதிக்கு திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ. கலைச்செல்வன் கூறியதாவது:-

சபாநாயகரிடம் இருந்து எனக்கு நோட்டீஸ் வரவில்லை. வந்தபிறகு அதற்கு பதில் அளிக்கிறேன். அதே நேரத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருப்பது ஜனநாயக விரோதமாகும். நியாயத்துக்கும், தர்மத்துக்கும், உண்மைக்கும் எதிரானதாகும். அந்த 18 எம்.எல்.ஏ.க்களையும் மக்கள் விரும்புகிறார்கள்.

11 எம்.எல்.ஏ.க்களை வைத்துக்கொண்டு ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் நடத்தினார். அவர்கள் அம்மா அமைத்த ஆட்சியை கவிழ்க்க வாக்களித்தார்கள். ஆனால் 18 எம்.எல்.ஏ.க்கள் அந்த ஆட்சியை காப்பாற்ற நினைத்தார்கள். எனவே 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது ஜனநாயக படுகொலை ஆகும். #TTVDhinakaran #ADMKMLAs

Tags:    

Similar News