செய்திகள்

கோயம்பேடு அருகே வீட்டில் போதை பாக்கு தயாரிப்பு- வடமாநில வாலிபர் கைது

Published On 2018-10-25 08:59 GMT   |   Update On 2018-10-25 08:59 GMT
சென்னை கோயம்பேடு அருகே வீட்டில் போதை பாக்கு தயாரித்து விற்பனை செய்து வந்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
போரூர்:

சென்னை கோயம்பேடு மார்க்கெட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தடை செய்யப்பட்ட ‘மாவா’ எனப்படும் போதைப்பாக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதையடுத்து அங்குள்ள பூ மார்க்கெட் அருகே சந்தேகப்படும் நிலையில் 2 சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து கோயம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் விசாரித்தார்.

அப்போது அவரிடம் போதை பாக்கு பவுடர் (மாவா) பாக்கெட்டுகள் இருந்தன. எனவே அவரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவனது பெயர் ஜித்தேந்திர குமார் படேல் (24) என தெரிய வந்தது. இவர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

ஜித்தேந்திரகுமார் நெற்குன்றம் சுப்பிரமணியசாமி கோவில் தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். அங்கு யாருக்கும் தெரியாமல் மாவா (போதைப்பாக்கு) தயாரித்து கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்து வந்ததாக கூறினார்.

உடனே வீட்டுக்கு சென்ற போலீசார் அங்கு தயாரித்து வைத்திருந்த 5 கிலோ எடையுள்ள மாவாவை பறிமுதல் செய்தனர். மேலும் மாவா தயாரிக்க பயன்படுத்திய 2 கிரைண்டர், 2 மிக்சி, ஒரு 2 சக்கரவாகனம், ரொக்கப்பணம் 600 ரூபாய் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அப்போது இவரது கூட்டாளி உதயம் படேல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News