சுவாமிமலை அருகே டிராக்டர் மோதி தொழிலாளி பலி- டிரைவர் தப்பி ஓட்டம்
சுவாமிமலை:
கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலை அருகே உள்ள திருப்புறம்பியத்தை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 50). பம்பு பிட்டர். இவர் இன்று காலை கும்பகோணத்திலிருந்து திருப்புறம்பியத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அவர் திருப்புறம்பியம் கடைவீதியில் சென்ற போது அந்த வழியாக வந்த ஒரு டிராக்டர் துரைராஜ் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை கண்ட டிராக்டர் டிரைவர் டிராக்டரை நிறுத்தி விட்டு தப்பி சென்று விட்டார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சுவாமிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று துரைராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர். பலியான துரைராஜிக்கு விஜயா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
டிராக்டர் மோதி தொழிலாளி பலியான சம்பவம் திருப்புறம்பியத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.