தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்- போலீசார் விசாரணை
தஞ்சாவூர்:
தஞ்சையை அடுத்த புன்னை நல்லூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வார்கள். இக்கோவிலுக்கு சொந்தமான குளம், கோவில் அருகிலேயே அமைந்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அப்போது கோவில் குளத்தில் மீன்கள் செத்து மிதந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. பின்னர் இதுபற்றி பக்தர்கள், கோவில் ஊழியர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து தஞ்சை தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கோவில் குளத்தில் மர்மநபர்கள் யாரும் விஷம் கலந்தார்களா? அல்லது வேறெதும் காரணமா? என்று விசாரித்து வருகிறார்கள்.
கோவில் குளத்தில் மீன்கள் செத்து மிதந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.