செய்திகள்

திண்டுக்கல் அருகே மான் வேட்டையாடிய கும்பல் கைது

Published On 2018-10-21 10:27 GMT   |   Update On 2018-10-21 10:27 GMT
திண்டுக்கல் அருகே மான் வேட்டையாடிய கும்பலில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கன்னிவாடி:

திண்டுக்கல் அருகே கன்னிவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட ஆடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார மலை கிராமங்களில் வனத்துறையினர் வேட்டை தடுப்புக்காக ரோந்து சென்று வருகின்றனர். பாரஸ்டர் சாமிநாதன் தலைமையில் வனத்துறையினர் ரோந்து சென்ற போது ஒரு கும்பல் மான் வேட்டையாடி சமைத்துக் கொண்டு இருந்தனர்.

அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்தபோது ஒருவர் தப்பி ஓடி விட்டார். 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் திருச்சி தில்லை நகரைச் சேர்ந்த பாலாஜி (வயது 38), லால்குடியைச் சேர்ந்த சரவணன் என தெரிய வந்தது.

அவர்களை கைது செய்து கன்னிவாடி ரேஞ்சர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். மேலும் தப்பி ஓடிய நபர் ஆடலூரைச் சேர்ந்த ஆனந்த் என்பதும் தற்போது திருச்சியில் பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது. அவரை தேடி வருகின்றனர்.

வனத்துறையினர் சரவணன் மற்றும பாலாஜியிடம் மான் வேட்டையாடி பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் பொருட்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து 4 கிலோ மான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. வேறு ஏதும் கும்பலுக்கு தொடர்பு இருக்கிறதா? எனவும் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

ரேஞ்சர் தெய்வசர்மா தலைமையில் பாரஸ்டர் தண்டபாணி, வனக்காப்பாளர்கள் பீட்டர், சங்கர், வேல்முருகன் ஆகியோர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News