செய்திகள்

பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Published On 2018-10-19 15:57 IST   |   Update On 2018-10-19 15:57:00 IST
கிருஷ்ணா நதி நீர்வரத்து காரணமாக இணைப்பு கால்வாயில் புழல் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று காலை முதல் நீர் திறப்பு 400 கனஅடியாக உயர்த்தப்பட்டது.
ஊத்துக்கோட்டை:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து கடந்த 29-ந் தேதியிலிருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

கண்டலேறு அணையில் வினாடிக்கு 1200 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு 595 கனஅடி வீதம் வருகிறது.

கடந்த 29-ந் தேதி ஏரியின் நீர் மட்டம் 12.25 அடியாக பதிவாகி வெறும் 13 மில்லியன் கனஅடி மட்டும் தான் இருப்பில் இருந்தது. தற்போது கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் ஏரியின் நீர் மட்டம் கிடுகிடு என்று உயர்ந்து வருகிறது.

கிருஷ்ணா நதி நீர்வரத்து காரணமாக கடந்த 6-ந் தேதி இணைப்பு கால்வாயில் புழல் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 300 கனஅடி வீதம் திறக்கப்பட்டது.

இன்று காலை முதல் நீர் திறப்பு 400 கனஅடியாக உயர்த்தப்பட்டது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 20 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர் மட்டம் 24.08 அடியாக பதிவாகியது. 720 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
Tags:    

Similar News