செய்திகள்

ஆம்னி பஸ்களில் வசூல் கொள்ளை: நெல்லை-ரூ.1800, மதுரை-ரூ.1500

Published On 2018-10-15 06:03 GMT   |   Update On 2018-10-15 06:26 GMT
ஆயுத பூஜை, விஜய தசமி பண்டிகையை யொட்டி தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. #OmniBuses #AyuthaPuja
சென்னை:

ஆயுத பூஜை, விஜய தசமி பண்டிகைகள் வருகிற வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் வருகிறது.

தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதால் சென்னையில் வசிக்கும் பெரும்பாலானவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

இதை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் கட்டண கொள்ளை நடப்பதாக புகார் எழுந்துள்ளது. சுமார் 60 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை கட்டண அதிகமாக வசூலிக்கப்படுகிறது.

சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.1000 முதல் ரூ.1500 வரையிலும், கோவைக்கு ரூ.1000 முதல் ரூ.1600 வரையிலும், நெல்லைக்கு ரூ.1000 முதல் ரூ.1800 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பயணிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இது தொடர்பாக பயணிகள் சிலர் கூறியதாவது:-

சாதாரண நாட்களில் மதுரை, நெல்லை போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்லும் போது படுக்கை வசதி கொண்ட சொகுசு பஸ்களில் கட்டணம் ரூ.800 வசூலிக்கப்படும். ஆனால் தற்போது ரூ.1800 வரை வசூலிக்கப்படுகிறது. இணைய தளங்களில் வெளிப்படையாகவே போட்டு கூடுதல் கட்டணத்தை வசூலிக்கிறார்கள்.



கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு கூறி இருப்பது வெறும் கண்துடைப்பாகவே உள்ளது. ஆம்னி பஸ்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இதனால் பொது மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #OmniBuses #AyuthaPuja
Tags:    

Similar News