பேரணாம்பட்டு அருகே மாணவியை கடத்திய மெக்கானிக் போக்சோவில் கைது
பேரணாம்பட்டு:
பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 23). மோட்டார் சைக்கிள்மெக்கானிக். இவர் தனது எதிர் வீட்டில் வசித்து வந்த பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வரும் சுமார் 17 வயதுள்ள மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு மாணவி திடீரென காணாமல் போனார். மாணவியை அவரது பெற்றோர் பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை, மாணவியை மெக்கானிக் பிரவீன்குமார் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி கடத்தி சென்றிருக்கலாம் என்று போலீசில் புகார் செய்தனர்.
மேல்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் திருமணம் செய்வதற்காக ஆந்திர மாநிலத்திற்கு சிறுமியை கடத்தி செல்ல முயன்ற மெக்கானிக் பிரவீன்குமாரை பேரணாம்பட்டு வீ.கோட்டா சந்திப்பு சாலையில் போலீசார் பிடித்தனர்.
இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.