ஒரத்தநாடு அருகே வீட்டின் ஓடுகளை பிரித்து நகை திருட்டு
ஒரத்தநாடு:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே தலையாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜரத்னம். இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மனைவி தேவ சுந்தரி (வயது 50). இவரது மகள், தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று தேவசுந்தரி, 100 நாள் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மாலையில் வேலை முடிந்து அவர் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் மேற்கூரையில் இருந்த ஓடுகள் பிரிக்கப்பட்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டார். இதனால் வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கிருந்த 6 பவுன் நகை திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதன் மதிப்பு ரூ.1¼ லட்சம் ஆகும்.
பூட்டிய வீட்டை நோட்டமிட்ட மர்ம ஆசாமி, வீட்டின் மேல் உள்ள ஓடுகளை பிரித்து உள்ளே இறங்கி நகையை திருடி சென்றது தெரிய வந்தது.
இதுபற்றி அவர் ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் அமிர்தலிங்கம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.