செய்திகள்

வக்பு வாரிய இடத்தை வாடகைக்கு விட்டு ரூ.8 லட்சம் மோசடி - கமி‌ஷனர் ஆபீசில் புகார்

Published On 2018-10-04 11:24 GMT   |   Update On 2018-10-04 11:24 GMT
துரைபாக்கத்தில் வக்பு வாரிய இடத்தை வாடகைக்கு விட்டு ரூ.8 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

ஆடு, கோழி இறைச்சி வியாபாரம் செய்து வரும் நான் கடந்த 2015-ம் ஆண்டு வாடகைக்கு இடம் பார்த்தேன். அப்போது அன்வர் பாட்ஷா என்பவர் ஒரு டிரஸ்டின் தலைவராக இருப்பதாக கூறி அணுகினார்.

ஒக்கியம் துரைப்பாக்கத்தில் ஆலிமா காலனி மெயின் ரோட்டில் 18 கிரவுண்டு இடம் உள்ளதாக கூறினார். அதில் 4800 சதுரஅடி இடத்தை வாடகைக்கு விடுவதாக கூறினார். இதற்காக முன் பணமாக ரூ.6 லட்சம் கொடுத்தேன். பின்னர் காலி இடத்தை சமன் செய்து கூரை போடுவதற்காக ரூ.40 லட்சம் செலவு செய்தேன். 11 மாதத்துக்கு பின்னர் வாடகை ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. அப்போது அன்வர் பாட்ஷாவிடம் மேலும் ரூ.2 லட்சம் கொடுத்தேன்.

இந்த நிலையில் அந்த இடம் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது. இதுபற்றி கேட்டபோது அன்வர் பாஷா முறையாக பதில் அளிக்கவில்லை. இதனையடுத்து கடந்த 24-ந்தேதி நீலாங்கரை போலீசில் புகார் அளித்தேன். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே அன்வர்பாஷா மீதும் இதற்கு உடந்தையாக இருக்கும் வக்பு வாரிய அதிகாரி சாதிக் பாட்ஷா மீதும் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். நான் இழந்த பணத்தையும் மீட்டு தருமாரும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News