செய்திகள்

கொடைக்கானலில் கனமழை - வேகமாக உயரும் அணைகளின் நீர் மட்டம்

Published On 2018-10-04 15:49 IST   |   Update On 2018-10-04 15:49:00 IST
கொடைக்கானலில் பெய்து வரும் கன மழை காரணமாக அணைகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
கொடைக்கானல்:

மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் எப்போதும் இதமான சீசன் இருக்கும். கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கன மழை நீடித்து வருகிறது. அதன்படி கொடைக்கானல் மேல்மலை, கீழ்மலை பகுதியில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்றும் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது.

இதனால் மலைப்பகுதியில் உள்ள அருவிகளான வெள்ளி நீர் வீழ்ச்சி, வட்டக்கானல் அருவி, பாம்பார் நீர் வீழ்ச்சி, பியர்சோழா அருவி, எலிவாலி நீர் வீழ்ச்சி ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் தங்களது காமிராக்களில் படம் எடுத்து மகிழ்ந்து வருகிறார்கள்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் கேரட், பீட்ரூட், பீன்ஸ் சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர் மழையால் பூண்டு பயிரில் அழுகல் நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் கவலையடைந்துள்ளனர்.

கொட்டித் தீர்த்து வரும் மழையால் கொடைக்கானல் நகர் பகுதிக்கு குடிநீர் ஆதாரமான மனோ ரஞ்சிதம் சோலை அணை, நகராட்சி நீர் தேக்கம், ஆகியவையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

இது போக கொடைக்கானல் மலை அடிவாரத்தில் உள்ள பாலாறு, பொறுந்தலாறு அணை, வரதமாநதி அணை, மஞ்சளாறு அணை ஆகியவற்றின் நீர் மட்டமும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இன்று காலை வரை பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் காலை நேரத்தில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் அவதிப்பட்டனர்.

Tags:    

Similar News