கும்பகோணத்தில் அரசு மருத்துவமனையில் செல்போன் பறித்த வாலிபர் கைது
கும்பகோணம், அக்.2-
கும்பகோணம் நகரப் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவரது மகன் தியாகராஜன் (வயது 27). இவர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தனியார் காவலராக பணி புரிந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று தியாகராஜன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் பணியில் நின்று கொண்டிருந்தார். அப்போது மணஞ்சேரியை சேர்ந்த முருகன் என்பவர் திடீரென அவசர சிகிச்சை வார்டில் நுழைந்து அங்கு இருந்த நோயாளிகளின் செல்போன்களை பறித்தார்.
இதை பார்த்த தியாகராஜன் அவரை பிடிக்க முற்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் தியாகராஜனை சரமாரி தாக்கினார். இதில் தியாகராஜனுக்கு கண் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து வார்டில் இருந்தவர்கள் முருகனை பிடித்து கும்பகோணம் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். தியாகராஜனுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.