செய்திகள்

மது குடிப்பதை தட்டிக்கேட்டதால் பெண் அடித்து கொலை- கணவர் ஆத்திரம்

Published On 2018-09-29 12:16 GMT   |   Update On 2018-09-29 12:16 GMT
வள்ளியூர் அருகே மது குடிப்பதை தட்டிக்கேட்டதால் பெண்ணை அடித்து கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

வள்ளியூர்:

வள்ளியூர் கலையரங்க தெருவை சேர்ந்தவர் நம்பி, கூலித்தொழிலாளி. இவரது மனைவி பேச்சியம்மாள் (வயது 37). நம்பிக்கு குடிப்பழக்கம் உள்ளது. தினமும் அவர் வேலைக்கு சென்றுவிட்டு மதுகுடித்தபடி வீட்டுக்கு வருவார். வீட்டில் மனைவி, குழந்தைகளிடம் போதையில் தகராறு செய்துவந்தார்.

மேலும் வேலை செய்து கிடைக்கும் சம்பள பணத்தை வீட்டிற்கு சரிவர கொடுப்பதில்லையாம். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நம்பி மது குடித்துவிட்டு வரும்போதெல்லாம் பேச்சியம்மாள் கண்டித்தார்.

இந்தநிலையில் நேற்று இரவு நம்பி வழக்கம்போல் குடித்துவிட்டு வந்தார். இதனால் கணவன்- மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் படுத்து தூங்கி விட்டனர்.

நள்ளிரவு திடீரென விழித்த நம்பி ஆத்திரத்தில் அங்கு கிடந்த கம்பை எடுத்து மனைவி பேச்சியம்மாளை சரமாரியாக தாக்கினார். இதில் பேச்சியம்மாளின் முகம் சிதைந்தது.

பலத்த காயம் அடைந்த பேச்சியம்மாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். உடனே நம்பி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி வள்ளியூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொலை செய்யப்பட்ட பேச்சியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளி நம்பியை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் வள்ளியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News