செய்திகள்

புதுவையில் பால் புகட்டும்போது 2 மாத குழந்தை மூச்சு திணறி உயிரிழப்பு

Published On 2018-09-29 04:36 GMT   |   Update On 2018-09-29 04:36 GMT
புதுவையில் 2 மாத குழந்தைக்கு பால் புகட்டும் போது மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:

புதுவை கனகசெட்டி குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். இளநீர் வியாபாரியான இவர் கருவடிக்குப்பம் சந்திப்பில் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சத்யா (வயது 22).

இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. அந்த குழந்தைகளுக்கு ரக்சனா, ரஞ்சனா என பெயர் சூட்டி மகிழ்ந்து வந்தனர்.

நேற்று சத்யா கணவருக்கு உதவியாக கருவடிக்குப்பத்தில் இளநீர் வியாபாரத்தில் ஈடுபட்டார். அப்போது குழந்தை ரக்சனா அழுததால் அந்த குழந்தைக்கு சத்யா தாய்ப்பால் புகட்டினார்.

அப்போது திடீரென குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த சத்யா உடனடியாக குழந்தையை சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

அங்கு டாக்டர்கள் போராடி தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்து போனது.

இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர், உதவி சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News