திருமங்கலத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி
போரூர்:
சென்னை வில்லிவாக்கம் தாந்தோணியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரித்திவி ராஜன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் இவரது மனைவி முருகேஸ்வரி (வயது 31).
பிரித்திவிராஜன் நேற்று மாலை தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் கோயம்பேட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.
இரவு 8 மணி அளவில் வீடு திரும்பும் வழியில் திருமங்கலம் 100 அடி சாலை 18-வது மெயின் ரோட்டில் வந்து கொண்டிருந்தபோது சாலையில் இருந்த பள்ளத்தில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் இறங்கியது. இதில் நிலை தடுமாறி பிரித்திவிராஜன் மனைவி குழந்தைகளுடன் சாலையில் கீழே விழுந்தார்.
அப்போது அவ்வழியே கியாஸ் சிலிண்டர் ஏற்றிக் கொண்டு வந்த லாரி முருகேஸ்வரி இடுப்பு பகுதியில் ஏறி இறங்கியது உடனடியாக முருகேஸ்வரியை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டை சேர்ந்த லாரி டிரைவர் லட்சுமணன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #accident