பழனி அருகே குடிநீர் குழாயை உடைத்து தண்ணீர் திருடும் கும்பல்
பழனி:
பழனி அருகே கோதைமங்கலம் ஊராட்சிக் குட்பட்ட ஜவகர்நகர், கணபதிநகர், பெரும் பாறை, கொத்தனார்காலனி, ஆர்.எம்.கே.நகர், சின்னாரகவுண்டன்வலசு உள்பட பல்வேறு கிராமங்களில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கோதைமங்கலம் பெரியாவுடையார் கோவில் செல்லும் வழியில் ஊராட்சிக்கு சொந்தமான கிணறுகளில் இருந்து குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த குடிநீர் குழாயை உடைத்து சிலர் தங்கள் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். இதனால் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் காலிக் குடங்களுடன் அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கையில், கடந்த சில நாட்களாகவே இப்பகுதியில் சீரான குடிநீர் வினியோகம் இல்லை. பெரியஆவுடையார்கோவில் பிரிவு அருகே குழாய் உடைக்கப்பட்ட சிறிய கால்வாய் மூலம் அப்பகுதியில் உள்ள தனியார் தோட்டத்திற்கு தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாகவே கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இதனால் அந்த கும்பல் தைரியமாக தண்ணீர் திருடி வருகின்றனர் என வேதனையுடன் தெரிவித்தனர்.