செய்திகள்

பெரியபாளையம் அருகே குடிநீர் கேட்டு பஸ்சை சிறைபிடித்து பெண்கள் மறியல்

Published On 2018-09-18 12:25 IST   |   Update On 2018-09-18 12:25:00 IST
பெரியபாளையம் அருகே குடிநீர் கேட்டு பஸ்சை சிறைபிடித்து பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.

பெரியபாளையம்:

பெரியபாளையம் அருகே மெய்யூர் ஊராட்சிக்குட்பட்ட மேட்டுத்தெரு, பள்ளத்தெரு, பாய் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்பட வில்லை. இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கிடையே நேற்று இரவு முழுவதும் அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது.

இதனை கண்டித்தும், குடிநீர் வழங்ககோரியும் அப்பகுதி பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திருவள்ளூரில் இருந்து மெய்யூர் நோக்கி சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊராட்சி செயலாளர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இதையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News