செய்திகள்

வயல்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் காமராஜ் பேட்டி

Published On 2018-09-17 16:06 GMT   |   Update On 2018-09-17 16:06 GMT
திருவாரூர் மாவட்டத்தில் சம்பா பயிர்கள் கருகவில்லை, வயல்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.
திருவாரூர்:

திருவாரூர் சட்டமன்ற தொகுதி வளர்ச்சிக்கான கலந்துரையாடல் கூட்டம் வர்த்தக சங்க கட்டிடத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வர்த்தக சங்க தலைவர் பாலமுருகன், முன்னாள் பொதுச்செயலாளர் பிரபாகரன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, நுகர்வோர் அமைப்பின் தலைவர் அண்ணாதுரை, செயலாளர் ரமேஷ். ஆன்மிகம் ஆனந்தம் அமைப்பு நிர்வாகி கனகராஜ், தொழிலதிபர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அப்போது தொகுதி மேம்பாட்டிற்கு தேவையானவை குறித்து கருத்து தெரிவித்தனர். கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது:-

திருவாரூர் தொகுதி வளர்ச்சிக்கான கலந்துரையாடல் கூட்டம் உள்நோக்கத்துடன் நடைபெறுவதாக கருத வேண்டாம். திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் இல்லாத காரணத்தால் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் என்ற முறையில் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளேன். இங்கு சாலை வசதி, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து தெரிவித்துள்ளர்கள். அனைத்து தேவைகளும் முதல்-அமைச்சர் ஒப்புதல் பெற்று நிறைவேற்றப் படும்.

திருவாரூரில் விரைவில் தொழிற்பேட்டை அமைக்கப்படும். திருவாரூர் விளமல் பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய பஸ் நிலையம் விரைவில் திறக்கப்படும். ஓடம்போக்கி ஆறு தூர்வாரப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் சம்பா பயிர்கள் கருகவில்லை. தற்போது சம்பா விதைப்பு நடைபெற்று வரும் சூழலில் விவசாயிகளுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. வயல்களுக்கு தண்ணீரைகொண்டு செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முதல்-அமைச்சரின்் உத்தரவின்படி எடுக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஓரிரு நாட்களில் தண்ணீர் பிரச்சினை சரியாகி விடும். இவ்வாறு அமைச்சர் கூறினார். 
Tags:    

Similar News