செய்திகள்

சாணார்பட்டி அருகே மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

Published On 2018-09-10 16:03 IST   |   Update On 2018-09-10 16:03:00 IST
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே மணல் கடத்த பயன்படுத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குள்ளனம்பட்டி:

சாணார்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நீர் நிலைகளில் இருந்து அதிக அளவு மணல் கடத்தப்பட்டு வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு குடிநீருக்கும், விவசாயத்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

போலீசார் மணல் கடத்தும் கும்பலை கைது செய்து அபராதம் விதித்த போதும் மணல் கடத்தல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சாணார்பட்டி பகுதியில் டிராக்டரில் மணல் கடத்தப்படுவதாக சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் அபுதல்ஹா தலைமையில் ஏட்டுகள் செல்வராஜ், முருகானந்தம் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வேகமாக வந்த டிராக்டரை நிறுத்தினர். போலீசாரை கண்டதும் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். டிராக்டரை சோதனையிட்டதில் கிணற்று மணல் கடத்தியது தெரிய வந்தது.

எனவே டிராக்டரை பறிமுதல் செய்து கோட்டாட்சியர் ஜீவாவிடம் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் டிராக்டர் உரிமையாளர் மற்றும் டிரைவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News