செய்திகள்

நண்பருக்காக தேர்வு எழுதிய வடமாநில வாலிபர் கைது

Published On 2018-09-10 07:58 GMT   |   Update On 2018-09-10 07:58 GMT
மத்திய அரசின் கேட்ரிங் படிப்பில் சேர நண்பருக்காக தேர்வு எழுதிய வடமாநில வாலிபரை கைது செய்த போலீசார் அவரது நண்பரை தேடி வருகின்றனர்.
சோழிங்கநல்லூர்:

சென்னை சோழிங்க நல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் மத்திய அரசின் கேட்ரிங் பிரிவுக்கான தேர்வு நடைபெற்றது.

பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 17 பேர் இந்த தேர்வை எழுதினார்கள். அப்பொழுது தேர்வறையில் அரியானாவை சேர்ந்த மனிஷ் (20) செல்போனை பயன்படுத்தினார். கல்லூரி மேற்பார்வையாளர் மனீஷை விசாரித்தபோது பதட்டத்துடன் நேர்மாறாக பதில் கூறினார்.

அவருடைய செல்போனை சோதித்தபோது கேள்விகளை எஸ்.எம்.எஸ் மூலமாக வேறு ஒரு நபருக்கு அனுப்பி பதில் கேட்டது தெரிய வந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த கல்லூரி நிர்வாகம் செம்மெஞ்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

உடனடியாக தேர்வு நடந்த பகுதிக்கு வந்த போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை செய்தனர். அப்பொழுது அவரது பெயர் அஜய் (24) என்பதும் அரியனாவை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.

தனது நண்பர் மனீஷுக்கு பதிலாக தான் தேர்வு எழுத வந்ததாகவும், மனீஷ் அவர் தங்கும் இடத்தில் இருந்து செல்போன் மூலம் கேள்விக்கான பதிலை அனுப்பியதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து கல்லூரி நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆள் மாறாட்டம் செய்த அஜயை கைது செய்தனர். அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர். மனீஷ் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News