மயிலாடுதுறை அருகே பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்- 3 பேர் கைது
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள வழுவூர் பகுதியைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகன் மணிகண்டன் (வயது35). பாட்டாளி மக்கள் கட்சியில் இவர் முன்னாள் இளைஞரணி செயலாளராக இருந்தவர்.
மணிகண்டன் நேற்று சீனிவாசபுரம் அருகே தேவசேனாநகரில் உள்ள அவரது வீட்டு மனையை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது திடீரென தேவசேனாநகரில் சென்றபோது 3 பேர் கையில் அரிவாள் மற்றும் கத்தியுடன் மணிகண்டனை வழி மறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் சத்தம் போட்டார். உடனே 3 பேரும் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து மணிகண்டன் மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் டெல்லிபாபு வழக்கு பதிவு செய்து ஆலவெளி சேமங்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் (30), எலந்தங்குடியைச் சேர்ந்த பாரதிராஜா (37), சீனிவாசபுரத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மயிலாடுதுறை அருகே உள்ள ஆரோக்கியநாத புரத்தைச் சேர்ந்த தேவசகாயம் மகன் கபிரியேல் என்பவருக்கும், மணிகண்டனுக்கு இடையில் ஏற்கனவே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. இதனால் அவரது தூண்டுதலின் பேரில் இந்த 3 பேரும் மணிகண்டனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.
இதையடுத்து ஜெயராஜ், பாரதிராஜா, தினேஷ்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.