செய்திகள்
கோடை காலத்தை போன்று வேலூரில் 101.7 டிகிரி வெயில் கொளுத்தியது
வேலூரில் 101.7 டிகிரி வெயில் கொளுத்தியதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். ரோட்டில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.
வேலூர்:
கோடைகாலத்தில் வேலூர் மாவட்டத்தில் வெயில் கொளுத்தும். இதனால் பொதுமக்கள் கோடைகாலங்களில் மிகுந்த சிரமத்திற்குள்ளாவார்கள். இந்த வருடம் கோடைகாலம் முடிந்தும் வேலூரில் வெயிலின் தாக்கம் குறையவில்லை. வேலூர் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்தாலும், அதற்கு இணையாக வெயிலும் கொளுத்துகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் 100 டிகிரியும், நேற்று 101.7 டிகிரியும் வெயில் பதிவானது.
இதனால் பகல் நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
நேற்று இரவு 8.30 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. சுமார் ½ மணி நேரம் மழை பெய்ததால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இரவில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.