மதுரையில் 342 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - 4 பேர் கைது
மதுரை:
தமிழக அரசு புகையிலை பொருட்களுக்கு தடை விதித்திருந்தாலும் சர்வ சாதாரணமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுத்தும் புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க முடியவில்லை.
செல்லூர் குலமங்கலம் மெயின்ரோட்டில் உள்ள பூந்தமல்லி நகரில் உள்ள குடோனில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் பதுக்கப்பட்டு நகரில் சப்ளை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து செல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது மீனாட்சி சுந்தரம் (39) என்பவருக்கு சொந்தமான குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 342 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும்.
இதுதொடர்பாக ராஜாஅருள்மொழி, சசிக்குமார், ரங்கநாதன், மற்றொரு மீனாட்சிசுந்தரம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய குடோன் உரிமையாளர் கல்யாணசுந்தரம் மற்றும் குருசாமி ஆகியோரை தேடி வருகின்றனர்.