செய்திகள்

பட்டாக்கத்தியுடன் சிக்கிய மாணவர்களை போலீஸ் முன்னிலையில் அடித்த பெற்றோர்

Published On 2018-09-01 09:01 IST   |   Update On 2018-09-01 09:01:00 IST
சென்னையில் பட்டாக்கத்திகளுடன் பேருந்தில் பயணம் செய்து சிக்கிய மாணவர்களை போலீஸ் முன்னிலையில் பெற்றோர் அடித்து அறிவுரை கூறினர். #ChennaiStudents #StudentsWithKnife
சென்னை:

சென்னையில் நேற்று முன்தினம் மாநகரப் பேருந்தில் பயணம்  செய்த மாணவர்கள், படிக்கட்டில் அமர்ந்தபடி பட்டாக்கத்தியை சாலையில் தீப்பொறி பறக்க உரசிக்கொண்டு வந்தனர். இந்த மாணவனின் செயலைப் பார்த்த பயணிகள் அச்சம் அடைந்தனர். இந்த வீடியோ வைரலாகப் பரவிய நிலையில் போலீசார் விசாரணை நடத்தி மாநில கல்லூரி முதலாம் ஆண்டு மாணவனை கைது செய்தனர்.



விசாரணையின்போது அவர் கொடுத்த தகவலின்படி மேலும் சில மாணவர்களை போலீசார் தேடி வந்தனர். அவர்களில் நேற்று அதிகாலை மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 4 மாணவர்களின் பெற்றோர்களையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்தனர். காவல் நிலையம் வந்த  பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் செயலைக் கேள்விப்பட்டு கூனிக் குறுகி நின்றனர். பெற்றோரின் முன்னிலையில் மாணவர்களிடம் போலீசார், மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினர்.

பெற்றோரும் மாணவர்களை கண்டித்து அறிவுரை கூறினர். அத்துடன் இப்படி ரவுடி போன்று நடந்துகொள்ளவா உங்களை கல்லூரிக்கு அனுப்பினோம் என்று கூறி மாணவர்களை அடித்தனர். மாணவர்களும் அழுதபடி கைகூப்பி அனைவரிடமும் மன்னிப்பு கேட்டனர்.

முன்னதாக மாநிலக் கல்லூரிக்குச் சென்ற கமிஷனர் விஸ்வநாதன், மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். பட்டாக்கத்தியுடன் மாணவர்கள் கல்லூரிக்கு வருவது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்வது தவறான செயல் என்று சுட்டிக் காட்டினார். போராட்டம் செய்பவர்கள் பின்னால் சென்று உங்கள் எதிர்காலத்தை வீணாக்கிக்கொள்ளாதீர்கள் என்றும் எச்சரித்தார். #ChennaiStudents #StudentsWithKnife

Tags:    

Similar News