செய்திகள்

தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

Published On 2018-08-31 10:06 GMT   |   Update On 2018-08-31 10:06 GMT
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #TamilNaduRains #ChennaiRains #IMD
சென்னை:

தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்த நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. அதேசமயம் வெப்பச் சலனம் காரணமாக உள்மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்து குளிர்வித்து வருகிறது. குறிப்பாக வட கடலோர மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

சென்னையைப் பொருத்தவரை பகல் வேளையில் வெயிலின் தாக்கம் இருந்தாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது.



இந்நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் தொடங்கி விடிய விடிய பரவலாக கனமழை பெய்தது. விடிந்த பிறகும் மழை தூறிக்கொண்டே இருந்தது. இதன் காரணமாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழலை மக்கள் அனுபவித்தனர். காலை 8.30 மணிக்கு பிறகு மழை படிப்படியாக குறைந்தது. எனினும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.

இந்த நிலையில் வெப்ப சலனம் நீடிப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மற்றும் மிதமான மழை ஓரிரு இடங்களில் பெய்யும் என்றும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிதம்பரம், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் 9. செ.மீ. மழை பதிவாகி உள்ளது. பரங்கிபேட்டை, கடலூரில் தலா 8 செ.மீ., பண்ருட்டி 7 செ.மீ மழை பெய்துள்ளது. சென்னையில் 4 செமீ மழை பெய்துள்ளது. #TamilNaduRains #ChennaiRains #IMD

Tags:    

Similar News