செய்திகள்

செங்குன்றம் அருகே விபத்து - வாலிபர் பலி

Published On 2018-08-30 09:05 GMT   |   Update On 2018-08-30 09:05 GMT
செங்குன்றம் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்குன்றம்:

இன்று காலை புழல்- அம்பத்தூர் சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார், தாறுமாறாக ஓடி 2 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி நின்றது. இதில் மோட்டார் சைக்கிள்களில் இருந்தவர்கள் கீழே விழுந்தனர்.

எதிர்பாராமல் நடந்த இந்த விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேரும், மற்றொரு மோட்டார் சைக்கிளில் இருந்த ஒருவரும் படுகாயம் அடைந்தனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு அடைந்தது.

தகவல் அறிந்ததும் செங்குன்றம் போலீசார் அங்கு சென்று போக்குவரத்தை சரி செய்தனர். விபத்தில் காயம் அடைந்தவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

அவருடைய பெயர் ராஜா (45). இவர் தனது மகன் பிரவீண்குமாரை (14) செங்குன்றத்தில் உள்ள ஒரு பள்ளியில் விடுவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்தபோது தாறுமாறாக ஓடிய கார் மோதி பலியாகி விட்டார்.

மாணவர் பிரவீண்குமார் பலத்த காயத்துடன் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து இந்த விபத்தில் சிக்கியவர் புருசோத்தமன் (46). அம்பத்தூரைச் சேர்ந்த இவரும் படுகாயம் அடைந்து ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார்.

காரை தாறுமாறாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் முருகன் (39) கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News