செய்திகள்

விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் கருவிகள்

Published On 2018-08-28 15:32 GMT   |   Update On 2018-08-28 15:32 GMT
மத்திய அரசு மானித்துடன் கூடிய விலையில் வேளாண் கருவிகள், இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்குமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
பெரம்பலூர்:

மத்திய அரசின் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் வேளாண்மை இயந்திர மயமாக்கும் திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானிய விலையில் பெற விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் 8 குதிரைத்திறன் முதல், 70 குதிரைத்திறன் வரை சக்தி கொண்ட டிராக்டர்கள், பவர் டில்லர், நெல் நடவு இயந்திரம், வைக்கோல் கட்டும் கருவி, சுழல் கலப்பை, விசைக் களையெடுப்பான், விதைக்கும் கருவி, வரப்பு அமைக்கும் கருவி, தட்டு வெட்டும் கருவி, டிராக்டரில் இயங்கும் தெளிப்பான் ஆகியவை வாங்க விவசாயிகளுக்கு மானிய உதவி வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் சிறு, குறு, ஆதிதிராவிட, பழங்குடியின, பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் வரை, மற்ற விவசாயிகளுக்கு 40 சதவீதம் வரையுமான தொகை அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகப்பட்ச மானியத் தொகை இவற்றில் எது குறைவோ அந்தத் தொகை மானியமாக வழங்கப்படுகிறது.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள், இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் விலைப் பட்டியல்கள், மானிய விவரங்கள் ஆகியவை வேளாண்மைப் பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களில் கிடைக்கும்.

இந்த திட்டத்தில் பயனாளிகளுக்கு விவசாய கருவிகள் வாங்கும் மானிய தொகை சம்பந்தப்பட்ட விவசாயகளின் வங்கி கணக்கிலேயே நேரடியாக மானிய தொகை வரவு வைக்கப்படும்.

மானிய விலையில் விவசாய கருவிகள் வாங்க மத்திய அரசின் இணையதள முகவரியில் விவசாயிகள் வேளாண் கருவிகள் வாங்க பதிவு செய்து கொள்ளலாம். இதில் பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் மானிய விலை வேளாண் கருவிகள் வழங்கப்படும்.

புகைப்படம் 1, பான் கார்டு ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், நிலவரி ரசீது, வாக்காளர் அடையாள அட்டை ஓட்டுநர் உரிமம், கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ், சிட்டா மற்றும் அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை செயற்பொறியாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

எனவே ஆன்லைன் மூலம் பதிவு செய்து மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் பெற்று விவசாயிகள் பயன்பெறலாம்.

பெரம்பலூர் மாவட்ட வேளாண்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News